
ஆங்கிலம், சமஸ்கிருதம், வங்காளம், ஹிந்தி, பிரான்சியம் ஆகிய மொழிகளில் தனிப்புலமை பெற்று அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். தாய் மொழியாம் தமிழ் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என்றார் பல மொழிகளில் புலமை பெற்ற பாவலர் பாரதியார்.
நான் யார்?
நான் இருக்கிறேன் என்பது யாவரும் அறிந்ததே. ஆயினும், நான் யார்? என்ற கேள்விக்கு பலரும் விடை தேடுகின்றனர். நான் என்ற இருப்பு உள்ளே நம் ஒவ்வொருவருக்கும் உள்ளே (அகம்) இருப்பதாக தோன்றுகிறது (பாவம்). இந்த அகம் பாவம் (உள் இருப்பு) இயற்கை வெளியில் இருந்து நம்மை வேறுபடுத்தி காட்டுகிறது.
வெளியில் (புறம்) இருக்கும் உணவு பொருட்கள் நாம் சாப்பிட்டதும் உள்ளே (அகம்) சென்று நான் ஆகி விடுகிறது. பருகும் நீரும், சுவாசிக்கும் காற்றும் அவ்வாறே. வெளியில் இருந்த மரமும் பறவையும் விலங்கும் வேறாக தெரிந்தாலும் உணவான பின் ஒன்றாக இருந்த நான் வேறொன்றாக மாறி விடுகிறது. உயிருள்ள போது உடலுக்குள் மெய்யாக இருந்த நான் இறந்த பிறகு பொய்யாக போய் இருந்த உடலும் அழிந்து போகிறது. திட பொருளாக இருந்த மரம் எரிக்கும் போது நெருப்பாகி காற்றாகி பிறகு சாம்பலாகி போகிறது.
நான் உள்ளே இருப்பதா அல்லது வெளியே இருக்கிறதா?
மாணிக்கவாசகர் தந்த திருவாசகத்தில்,
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்றவரவரை கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
வானம், பூமி, காற்று, ஒளி, உடல், உயிர், உண்மை, இன்மை, எல்லாவற்றிற்கும் அரசனாகி நான், எனது என்று அவர் அவரை ஆட்டுவிப்பவனாகி நிற்கின்ற இறைவனை என்ன சொல்லி வாழ்த்துவேன் என்கிறார்.
இவ்வாறு இறைவன் வானம், பூமி, காற்று, ஒளி, உடல், உயிர், உள்ளது இல்லாதது என்ற வெளியில் உள்ளவை அனைத்தும் ஒவ்வொருவருக்குள்ளும் நான் என்றும், எனது என்றும் எண்ணச் செய்து வாழ்க்கை என்ற நாடகத்தை நடத்துகிறார் என்பதன் மூலம் நான் என்பது வெளியில் இயற்கையாக தோன்றும் இறைவன், நமக்குள் நான் என்று தோன்றுகின்றார் என்று விளங்க செய்கிறார்.
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே என்பார் நாவுக்கரசர்.
“நான் உதியாது உள்ள நிலை நாம் அதுவாய் உள்ள நிலை” என்கிறார் ரமண மகரிஷி.
ஆதி சங்கரர் அருளிய நிர்வாணஷட்கம் என்ற தொகுப்பில் நான் யார் என்பதற்கு இவ்வாறு கூறுகிறார்.
மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை; இரு கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் இல்லை; வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் இல்லை; உயிர் மூச்சு மில்லை; ஐங் காற்றும் இல்லை; எழு தாதும் இல்லை; ஐம் போர்வை இல்லை; கை கால்கள் இல்லை; சினை வினையும் இல்லை; வெறுப்பில்லை விருப்பில்லை; மையல் பற்றில்லை; சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை; அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறில்லை; வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை; மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை; உணவில்லை, உணவாக்கி உண்பவரும் இல்லை! மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வில்லை; தந்தை தாயில்லை; தரும் பிறப்பில்லை; உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை; மாற்றங்கள் இல்லை; பல தோற்றங்கள் இல்லை; எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் இவனே; தளையில்லை; தடையில்லை; வீடுபேறில்லை; சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! அதாவது பேரின்ப வடிவாய் இருக்கும் இறைவனே நான் என்று அறியப்படுகிறது.
வாழ்க்கையின் நெடுகே நாம் அறிந்து கொள்வது எல்லாமே அறிதல் என்னும் வரையறைக்குள் வந்தாலும் , அறிவறிதலில் தலையாயதும், நிலையாயதும், உண்மையானதும் நான் என்ற தன்னை அறிதலே ஆகும்.
சித்தர்களும் இதையே முதன்மை படுத்தி சொல்கிறார்கள், தன்னை அறிதல் என்பதைத் தவிர்த்த அறிதல்கள் எதுவும் பெரியதாகாது, இதையே திரு மூலர்,
“என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்”
என்றும்,
“தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்”
என்றும்,
“தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த சிவனருளாலே”
எனச் சொல்கிறார் திருமூலர்.
இதையே சிவவாக்கியார்,
“என்னிலேயிருந்த ஒன்றையறிந்த தில்லையே
என்னிலேயிருந்த ஒன்றை யறிந்து கொண்டபின்
என்னிலேயிருந்த ஒன்றை யாவர் காணவல்லரே
என்னிலேயிருந்த ருந்திருந்து யாதுணர்ந்து கொண்டேனே”
என்கிறார். ஆக , சித்தர்கள் எல்லோரும் மனிதனாய் பிறந்தவன் அறியவேண்டியதில் முதன்மையானது, நான் என்ற தன்னை அறிவதே என்கிறார்கள்.
பாரதியார் தான் எழுதிய “நான்”என்ற பாடல் தொகுப்பில் மேற்சொன்ன அனைத்து கருத்துகளையும் உணர்ந்தவராக இறைவனே வெளியே இயற்கையாக விரிந்து தோன்றி நம் ஒவ்வொருவர் உள்ளும் நான் என்று உணரச்செய்கிறார்.
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்
கானில் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்
வாரியினுள் உயிரெலாம் நான்
கம்பனிசைத்த கவியெலாம் நான்
காருகர் தீட்டும் உரவெலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்
இன்னிசை மாதரிசையுளேன் நான்
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்
மந்திரங்கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங்கோடி சமைத்துளோன் நான்
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்டல் சக்தி கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச்சுடர் வானில் செல்லுவோன் நான்
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்கு முதற்சோதி நான்.
இந்த அறிவே உள்ளத்தில் ஏற்படும் ஒளி. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்றார் பாரதியார்.
நம் உள்ளத்தில் தோன்றுவதை வாக்கிலே சொல்லி, வாக்கிலே சொன்னபடி செயல்படுவதின் மூலம் நாம் அறவழியில் நடக்கிறோம் என்றும் அதனால் சேரும் பொருள் நிலைத்த இன்பம் தரும். நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று வாழ்ந்து பற்றுக்களில் இருந்து விடுபட்டு வீடு என்னும் ஆன்ம விடுதலை பெறுவோமாக.
Leave a Reply